டீ கடைக்காரருக்கு பத்மஸ்ரீ விருது - சாதனையால் உயர்ந்த சாமான்யரின் கதை

டீ கடைக்காரருக்கு பத்மஸ்ரீ விருது - சாதனையால் உயர்ந்த சாமான்யரின் கதை
டீ கடைக்காரருக்கு பத்மஸ்ரீ விருது - சாதனையால் உயர்ந்த சாமான்யரின் கதை

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பத்ம விருதில், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது. இந்தப் பத்மஸ்ரீ விருது பட்டியலில் ஒரு டீ கடைக்காரரும் இடம் பெற்றுள்ளார். ஒடிசாவின் கட்டாக் பகுதியில் டீ கடை நடத்தி வரும் தேவரப்பள்ளி பிரகாஷ் ராவ் தான் அவர். யார் இந்தத் தேவரப்பள்ளி பிரகாஷ் ராவ்? ஏன் இவருக்கு பத்மஸ்ரீ விருது?

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக டீ வியாபாரம் செய்து வரும் பிரகாஷ் ராவ், தனது வருமானத்தில் ஒரு பள்ளியை தொடங்கி 80க்கும் அதிகமான குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். சிறு வயதில் கல்வி மீது அதிக ஆர்வம் கொண்ட பிரகாஷுக்கு பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. 10 வகுப்பு முடிப்பதற்கு முன்னதாகவே அவரின் அப்பா நோய்வாய்ப்பட பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்ட பிரகாஷ், அப்பாவின் டீகடையை எடுத்து நடத்த தொடங்கிவிட்டார். தன்னுடைய படிப்பு கனவு பாதியிலேயே நின்று போக அதற்கு வேறு வடிவத்தில் உயிர் கொடுத்தார் பிரகாஷ்.

2000ம் ஆம் ஆண்டு சிறிய பள்ளியை தன் சொந்த செலவில் தொடங்கியுள்ளார். அப்பகுதியில் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை அழைத்து வந்து பாடம் கற்பிக்க தொடங்கியுள்ளார் பிரகாஷ். இவரின் சேவை அப்பகுதியில் பரவ, பலரும் பிரகாஷுக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளனர். அப்படியாக பிரகாஷின் பள்ளியில் தற்போது 80க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் பலர் தானாக முன்வந்து பள்ளியில் பாடம் கற்பித்து வருகின்றனர். ஆகவே இவரது சாதனையை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.

விருது குறித்து பேசிய பிரகாஷ், விருது அறிவிப்புக்கு பிறகு பலரும் என்னைப் பாராட்டி வருகின்றனர். என்னைப் பாராட்டி அழைப்புகள் வந்த வண்ணமே உள்ளன. விருது அறிவிப்பிலேயே மகிழ்ச்சியான தருணம் என்றால் என்னைப் பற்றி என் மனைவி தற்போது புரிந்துகொண்டிருக்கிறார். நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்று அவர் நினைத்து வந்தார். அந்த எண்ணம் தற்போது மாறி இருக்கும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேலும் காலை 6 மணி முதல் காலை 10 மணி முதல் டீ கடையில் இருப்பேன். 10 மணிக்கு பிறகு பள்ளிக்கு செல்வேன். அங்கு ஆசிரியர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் பாடம் கற்பிப்பார்கள். மதியத்துக்கு பிறகு நான் மருத்துவமனைக்கு செல்வேன். அங்கு சுடு தண்ணீர் , பால், டீ ஆகியவற்றை இலவசமாக கொடுப்பேன். ஆரம்ப காலங்களில் அனைத்து செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன். தற்போது நிறைய நன்கொடைகள் வருகின்றன. ஒடிசாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் என் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கலாமா என்று கேட்டார். நானா படேகர் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் மீடூ பிரச்னைக்கு பிறகு அந்தப்படம் குறித்து தகவல் ஏதும் இல்லை. என்னைப் பற்றி திரைப்படம் வெளியானால் எனக்கு மகிழ்ச்சி தான்.

என்னைப்பற்றி பிரதமர் மோடி மான்கீ பாத்தில் பேசினார். அதுதான் என்னுடைய மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் என்று தேவரப்பள்ளி பிரகாஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com