அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு முன்ஜாமீன்
வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்ததற்கு எதிரான கபில்சிபலின் முறையீடு குறித்து திங்கள்கிழமை விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் முன் ஜாமீன் மனு செல்லாது என சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா வாதாடினார். மேலும், “சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமானது.
கைது செய்தால் தான் உண்மை வெளிவரும். முன் ஜாமீன் எனும் பாதுகாப்பு இருந்தால் ப.சிதம்பரத்தை விசாரிக்க இயலாது. வழக்கின் விசாரணை எவ்வளவுதான் நடந்தாலும் உண்மைகள் அவரிடம் இருந்து வெளிவராது. இதற்கு காரணம் அவரின் அந்தஸ்து. இன்னொன்று அவருக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியும். காவலில் வைத்தால் மட்டும்தான் முடிவு வரும். சிதம்பரத்திற்கு சொந்தமாக வெளிநாட்டில் 17 வங்கிக்கணக்குகள் 10 அசையா சொத்துக்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. அரசியல் காழ்ப்புணர்ச்சி என சிதம்பரம் கூறினாலும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்தோம்.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.