ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், பிரதமர் நிவாரண நிதியை காங்கிரஸ் தலைமை தவறாக பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிக்கும் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது என குற்றஞ்சாட்டியுள்ள அவர், சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்போது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என்றும் சாடியுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, சோனியா உள்ளார். இதன் உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் உள்ளனர். இந்நிலையில், பாரதிய ஜனதா தலைவர் நட்டா, பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராஜீவ் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு குடும்பத்தின் செல்வத்திற்கான பசி நாட்டையே புண்படுத்துகிறது என விமர்சித்துள்ள நட்டா, காங்கிரஸ் செய்தது வெட்கக்கேடான மோசடி என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ப.சிதம்பரம், 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக் கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் பெற்றது உண்மைதான் என்றும், ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதில் என்ன தவறு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.