அனல் கிளப்பும் அசாம் பட்டியல் - நாடாளுமன்றத்தில் தொடர் அமளி

அனல் கிளப்பும் அசாம் பட்டியல் - நாடாளுமன்றத்தில் தொடர் அமளி
அனல் கிளப்பும் அசாம் பட்டியல் - நாடாளுமன்றத்தில் தொடர் அமளி

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஏராளமான இந்தியர்களின் பெயர் விடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டன. 

முன்னதாக திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாமில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டுமென்றும் இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

அசாம் மாநிலத்தில் வசிக்கும் வங்கதேசத்தைச் சாராத உண்மையான இந்திய குடிமகன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 40 லட்சம் பேர் இடம் பெறாதது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத மற்றும் மொழி சிறுபான்மையினர் பலர் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் இப்பட்டியல் மூலம் அரசியல் ஆதாயம் பெற பாஜக முனைவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

ஆனால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையே, சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநிலங்களவையில் அமித் ஷா பேசியதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com