'நாடாளுமன்றத்தின் மரபை மீறி மசோதாக்களுக்கு ஒப்புதல்' - எதிர்க்கட்சிகள் கண்டனம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், மத்திய அரசு இதுவரை 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளன. இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பெகாசஸ் உளவு விவகாரத்தில் உரிய விசாரணை மற்றும் விவாதம் தேவை என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இரண்டு வாரமாக முடக்கியுள்ளன. கடும் அமளி, கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், விவாதம் இன்றி மக்களவையில் 12 மசோதாக்கள் மற்றும் மாநிலங்களவையில் 9 மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.
மக்களவையில் ஒப்புதல் பெற்றுள்ள மசோதாக்களில் முன்தேதியிட்டு வரி வசூலிப்பது தொடர்பான முக்கிய சட்டத்திருத்தம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா ஆகியவை அடக்கம். இந்த இரண்டு மசோதாக்களும் நேற்று எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் பல பொருளாதார ரீதியான முக்கிய மசோதாக்கள் மற்றும் அத்தியாவசிய பாதுகாப்புத்துறை சேவைகளில் வேலைநிறுத்தத்தை தடுக்கும் சட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசுவை தடுப்பதற்கான முக்கிய சட்டமும் மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு வழி செய்யும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதைத் தவிர மக்களவையில் கூடுதல் அரசு செலவுகளுக்காக இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கத்தால் பாதிக்கப்பட்டால், அரசு செலவினங்களுக்கான மசோதா இறுதிகட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஒப்புதலுக்கு கொண்டுவரப்படும். ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இறுதி வாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று இருப்பது, மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என கருதுவதை காட்டுவதாக அமைந்துள்ளது.
முக்கிய மசோதாக்களுக்கு கூட ஒரு சில நிமிடங்களிலேயே ஒப்புதல் பெறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் குற்றம்சாட்டியுளளார். காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளும், இப்படி அமளிக்கிடையே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது நாடாளுமன்றத்தின் மரபல்ல என்றும், 'இது ஜனநாயகப் படுகொலை' என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், தாங்கள் விவாதத்துக்கு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் தான் விவாதம் நடக்காமல் தடுப்பதாகவும் ஆளும் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பொதுவாக காலை நேரத்தில் கேள்வி நேரம் உள்ளிட்ட அலுவல்கள் மற்றும் மதியத்துக்கு பிறகு மசோதாக்கள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் மீதான விவாதங்கள் என நடைபெறுவது வழக்கம். அப்படி தினமும் உணவு இடைவேளைக்குப் பிறகு மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்து இருந்தால் கூட இத்தனை மசோதாக்களை விவாதித்து ஒப்புதல் பெற்றிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
மசோதாக்களை தவிர முக்கிய பிரச்னைகள் தொடர்பான விவாதங்களுக்கும் மதியம் மற்றும் மாலை நேரம் ஒதுக்குவது மரபு. அப்படி அல்லாமல் அவசரகதியில் மசோதாக்களை விவாதம் இன்றி ஒப்புதல் அளிப்பதால் தான் இத்தனை மசோதாக்கள் நிறைவேற்றியுள்ளன என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.