ரயில்களில் மசாஜ் சேவை - அறிவிப்பை திரும்ப பெற ரயில்வே அமைச்சகம் முடிவு
இந்தூரில் இருந்து செல்லும் ரயில்களில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரயில்வே அமைச்சகம் முடிவு
செய்துள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
முதற்கட்டமாக, இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
தலை, கால்களில் மசாஜ் செய்வதற்கு ரூ.100 முதல் ரூ. 300 வரை கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது
3 முதல் 5 மசாஜ் செய்பவர்கள் பயணம் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் பயணிகள் பயன் பெறுவதோடு,
ரயில்வே துறைக்கும் ஆண்டிற்கு கூடுதலாக ரூ.90 லட்சம் வருவாய் கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி
உள்ளது என்று ரயில்வே வாரியத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த முடிவு இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என இந்தூர் தொகுதி பாரதிய ஜனதா எம்பி ஷங்கர் லால்வானி,
ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதினார். அதில், ரயில்களில் பெண்களும் பயணிக்கும் போது அவர்களுக்கு
அசவுகரியங்கள் ஏற்படும் என்பதால் மசாஜ் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என எம்பி ஷங்கர் லால்வானி
குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், பாஜக முன்னாள் எம்பியும் மக்களவை முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மகாஜனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு சில பயணிகளின் தேவைக்காக
இந்தியாவின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படக்கூடாது என சுட்டி காட்டியிருந்தார்.
மேலும் ரயில்களில் மசாஜ் சேவை தொடங்குவது குறித்து பல்வேறு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்தூரில்
இருந்து செல்லும் ரயில்களில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரயில்வே அமைச்சகம் முடிவு
செய்துள்ளது.