ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலம் தெலங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக கடந்த 2014-இல் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-இல் ஆந்திராவில் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்க வகை செய்யும் மசோதாவுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது. அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதாவது மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், சட்டப்பேரவை தலைநகராக அமராவதியையும், நீதித்துறை தலைநகராக கர்னூலையும் அறிவித்திருந்தது ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு.
இதற்கு விவசாயிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மூன்று தலைநகரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது ஆந்திர அரசு.
“ஆந்திராவின் அனைத்து பிராந்தியங்களின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம் எனபதை நாங்கள் நம்பினோம். அது தொடர்பாக முன்பு எங்கள் அரசு கொண்டு வந்த மசோதாவை திரும்பப் பெறுகிறோம். விரைவில் பிழை இல்லாத மசோதாவை பேரவையில் கொண்டு வருவோம்” என தெரிவித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதியை தலைநகராக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காக பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றிருந்தது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் முடிவை எதிர்த்து தலைநகர் அமைய நிலம் கொடுத்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.