கட்டுவிரியன் பாம்பை விழுங்க முயன்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!
உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ளது போலாப்பூர் கிராமம். இங்கு ஒரு வயது சிறுவன் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு ஊர்ந்துவந்த ஒரு குட்டி பாம்பை பார்த்துள்ளான். அப்போது சிறுவன் விளையாட்டாக அந்த பாம்பை பிடித்து பல்லால் கடித்து விழுங்க முயன்றுள்ளான்.
இதைக் கவனித்த சிறுவனின் தாய் ஓடிவந்து வாயிலிருந்து பாம்பை வெளியே எடுத்து வீசியுள்ளார். சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற அவனது பெற்றோர் டாக்டர்களிடம் அந்த இறந்துபோன பாம்பை காட்டியுள்ளனர்.
சிறுவன் விழுங்க முயன்ற பாம்பு கட்டுவிரியன் என்பதை கண்டறிந்த மருத்துவர்கள், இந்த வகை பாம்பு அதிக நச்சுத்தன்மை உடையது எனத் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனுக்கு விஷ எதிர்ப்பு ஊசி செலுத்தி, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.