ஓணம் பண்டிகை – தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “ மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று ஓணத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவோண நன்னாளில் இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என்று மலையாள மொழி பேசும் மக்களை வாழ்த்துகிறோம்” என்று கூறியுள்ளனர்.
டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்” பொன்ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழிபேசும் மக்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்த மக்கள் அனைவரும் கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவமும், ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும். கொரோனா பேரிடரின் பாதிப்புகளில் இருந்து மனிதகுலம் விரைந்து மேண்டெழுந்து, நலமும் வளமும் பெருகிட இந்த நன்னாளில் வழி பிறக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

