’ஹெலிகாப்டர்ல போக எவ்வளவு கேட்பாங்க?’: மனைவியின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர்!
ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்ற தனது மனைவியின் ஆசையை, தனது ஓய்வு நாளில் நிறைவேற்றி இருக்கிறார் ஆசிரியர் ஒருவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்த் மீனா. ஆசிரியர். இவர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த கிராமமான மலவாலி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்தார். இதற்காக தனியார் ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தினார். அதில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஏறினார். 18 நிமிடத்திலேயே தனது கிராமத்துக்கு வந்துவிட்டார் ரமேஷ் சந்த் மீனா. ‘ஏன் இந்த திடீர் ஏற்பாடு? என்று ரமேஷ் சந்திடம் கேட்டால், ‘இது என் மனைவியின் ஆசை’ என்கிறார்.
‘’ஒரு நாள், ஹெலிகாப்டர்ல போக எவ்வளவு ஆகும்னு என் மனைவி கேட்டா. அவளோட ஆசையை நிறைவேற்றணும்னு முடிவு பண்ணினேன். ஜெய்ப்பூர்ல இருந்து எங்க கிராமத்துக்குப் போக ரூ.3.70 லட்சம் கேட்டாங்க. கொடுத்தேன். இது தொடர் பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிச்சு அனுமதி வாங்கினேன். 18 நிமிஷம் பறந்து ஊருக்கு வந்தோம். எங்க ரெண்டு பேருக்குமே இது புது அனுபவமா இருந்தது’’ என்கிறார் ரமேஷ் மகிழ்ச்சியாக.
இவர்கள் ஹெலிகாப்டரில் வருவதைப் பார்க்க அந்த கிராமத்தினர் ஏராளமாக கூடியிருந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.