திருமணத்திற்கு வித்தியாசமான கண்டிசன் போட்ட மாப்பிள்ளை: இன்ப அதிர்ச்சியில் மணப்பெண்..!

திருமணத்திற்கு வித்தியாசமான கண்டிசன் போட்ட மாப்பிள்ளை: இன்ப அதிர்ச்சியில் மணப்பெண்..!

திருமணத்திற்கு வித்தியாசமான கண்டிசன் போட்ட மாப்பிள்ளை: இன்ப அதிர்ச்சியில் மணப்பெண்..!
Published on

வழக்கமாக திருமணத்திற்காக பெண் வீட்டாரிடம் இருந்து நகைகள், பணம், பொருட்களை சீர்வரிசையாக கேட்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த இளைஞர் சற்று வித்தியாசமானவர். திருமணத்திற்கு மாப்பிள்ள போட்ட கண்டிசனால் மணப்பெண் வீட்டார் இன்ப அதிர்ச்சியில் மிதந்துள்ளனர்.

இப்போது ஒரு கல்யாணம் நடக்க வேண்டும் என்றால் ஆயிரத்தெட்டு கண்டிசன். மாப்பிள்ளை படித்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும் என பெண் வீட்டாரின் எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே போகும். அதேபோல மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரிடம் இருந்து கார், பைக், வீடு என பலவற்றை வரதட்சனையாக வாங்கி குவித்துவிடுவர். வரதட்சனைக்கு எதிரான பல விழிப்புணர்வு தொடங்கிய போதும் மக்கள் விழித்துக் கொண்டதாக தெரியவில்லை. திருமணம் முடிந்தும் ஒரு சில பெண்கள் வரதட்சனை கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 

எனவே மன உளைச்சலில் அவர்கள் தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதெல்லாம் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். சரி மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து, திருமணம் நடத்த வந்தாலும் மண்டபம் கிடைப்பதில் சிக்கல். முகூர்த்த நாட்களில் மண்டபம் கிடைப்பதற்கே போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்திற்காக அதிரடி கண்டிசன் போட்டுள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை பலரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் பகவானை அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். பகவானின் பணியிட மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் அவர் காலை பிடித்து கண்ணீர் விட்டனர். இதனால் ஆசிரியர் பகவான் அனைவராலும் கொண்டாடப்பட்டார். தற்போது கொண்டாடப்படும் ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. வழக்கமாக பெண் வீட்டாரிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசைகளை தான் மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிஸ்வால் சற்று வித்தியாசமானவர். சிறு வயது முதலே இயற்கை மீது காதல் கொண்ட பிஸ்வால் திருமணத்திற்காக 1001 மரன்கன்றுகளை பெண் வீட்டாரிடம் இருந்து கேட்டுள்ளார். பழங்கள் கொடுக்கும் மரக்கன்றுகளையே மாப்பிள்ளை கேட்பது பெண் வீட்டாருக்கு சற்று வித்தியாசமாக இருந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கி உள்ளது. உடனே 1001 மரக்கன்றுகளை கொடுக்க சம்மதம் தெரிவித்த பெண் வீட்டார், மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். எனவே திருமணத்திற்கு முன்னதாகவே ஒரு வேனில் மாப்பிள்ளை கேட்ட 1001 மரக்கன்றுகளையும் அவர் வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டனர். இதில் 700-க்கும் அதிகமானவை மாமரத்தின் மரக்கன்றுகள். பெண் வீட்டாரிடம் இருந்து கிடைத்த மரக்கன்றுகளை கிராமவாசிகள் வீட்டாருக்கு பிஸ்வால் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பிஸ்வால் கூறும்போது, “திருமணத்திற்கு வரதட்சனை பெற வேண்டும் என்ற முறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். சிறு வயது முதலே எனக்கு இயற்கை மீது தீராத காதல் உள்ளது. அதனால்தான் 1001 மரக்கன்றுகளை கேட்டேன். மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வும் இதன் மூலம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமைதான் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது.  திருமணத்தில் எந்தவித சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார் பிஸ்வால். எனவே திருமணத்தில் வான வேடிக்கை இல்லை. மேளதாளங்கள் இல்லை. மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. “என் மனைவியும் ஆசிரியராகத்தான் பணியாற்றி வருகிறார். வரதட்சனை வாங்க நான் உடன்படவில்லை என்ற முடிவு தெரிந்ததும் அவரும் உள்ளம் மகிழ்ந்தார்” என பிஸ்வால் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com