சாதிய கொடுமையால் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட பெண் சடலம்
சாதி மாறி திருமணம் செய்ததாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம், சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட அவலம் நடந்துள்ளது.
ஒடிசாவின் பவுத் மாவட்டத்தின் கிருஷ்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்ருபன்கா. மனைவி மற்றும் அவரது சகோதரி ஆகியோருடன் இவர் வசித்துவந்தார். சாதி மாறி திருமணம் செய்ததாகக் கூறி இவர்களை கிராமத்தினர் ஊரை விட்டு விலக்கி வைத்திருந்தனர்.
இந்நிலையில், மனைவியின் சகோதரிக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட காரணத்தால், அப்பெண்ணின் சடலத்தை கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தர மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறுதிச் சடங்கில் உதவ யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியின் சகோதரி உடலை சைக்கிளில் கட்டி அடக்கம் செய்ய எடுத்துச் சென்றார் சத்ருபன்கா. மேலும் அவரே இறுதிச் சடங்குகளை செய்தார்.