பாகிஸ்தானுக்கான பேருந்து சேவை நிறுத்தம் - இந்தியா பதிலடி
பாகிஸ்தானுக்கான பேருந்து சேவையை இந்தியா ரத்து செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்துள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது, ரயில் சேவையை நிறுத்தியது என தன்னுடைய நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் நேற்று ரத்து செய்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அந்நாட்டிற்கான பேருந்து சேவையை இன்று ரத்து செய்துள்ளது. டெல்லி பேருந்து கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து லாகூருக்கு பேருந்து சேவை இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கேட் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் காலை 6 மணிக்கு பேருந்து செல்கிறது. 1999 பிப்ரவரி மாதம் முதல் பாகிஸ்தானுக்கான பேருந்து சேவை இருந்து வருகிறது. 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது இரண்டு வருடங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.