வட மாநிலத்தவரை கன்னடம் பேசச் சொல்லி தாக்குதல்: பெங்களூருவில் இருவர் கைது
பெங்களூருவில் கன்னடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தி காஷ்மீரை சேர்ந்த சகோதரர்களை தாக்கிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காஷ்மீரை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த 5 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் இருந்து தங்களது இல்லத்திற்கு காரில் செல்லும் போது, ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அவர்களைக் கன்னடம் பேச சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். கன்னடம் பேசாமல் இந்த இடத்தில் இருந்து செல்ல முடியாது என தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு கன்னடம் தெரியாது என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களை தாக்கிய அந்த கும்பல் அவர்களின் கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த காவல்துறையினர் அந்த கும்பலிடம் இருந்து வடமாநில சகோதரர்களை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மகேஷ் மற்றும் ஹரிஷ் என்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகேஷ் ஃபேஷன் டிசைனராக உள்ளார். ஹரிஷ் ஓட்டுநராக உள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 324 (பயங்கர ஆயுதங்களை கொண்ட தாக்கியது), 341,504 (அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.