வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகார பகுதிகள் குறைக்கப்படும் - அமித் ஷா உறுதி

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகார பகுதிகள் குறைக்கப்படும் - அமித் ஷா உறுதி
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகார பகுதிகள் குறைக்கப்படும் - அமித் ஷா உறுதி

நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு (ஏஎஃப்எஸ்பிஏ) உட்பட்ட பகுதிகள் குறைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

தீவிரவாதக் குழுக்கள் செயல்படுவதாக கருதப்படும் ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி, சந்தேகத்தின் அடிப்படையில் பிடியாணை இல்லாமல் ஒருவரை கைது செய்யவும், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளவும் முடியும். அதேபோல, சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டாலோ அல்லது ஆயுதங்களை வைத்திருந்தாலோ துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதப் படைகளுக்கு இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

மேலும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயுதப் படையினர் அத்துமீறி செயல்பட்டதாக கருதப்பட்டால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அவர்களை கைது செய்ய முடியாது. ராணுவத்தின் அனுமதி இல்லாமல் உள்ளூர் போலீஸாராலும் சம்பந்தப்பட்ட நபரை விசாரிக்க முடியாது.

இவ்வாறு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குவதால், அந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சட்டத்தை நீக்கக் கோரி வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நாகாலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற தொடங்கியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டார். அதில், "நாகாலாந்து, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்தன. ஆனால், இப்போது வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை மக்கள் கண்டு வருகின்றனர்" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com