மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், அசைவ உணவுகள் மற்றும் இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த தடைவிதித்து வதோதரா கார்ப்பரேசன் உத்தரவிட்டுள்ளது.
வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் (விஎம்சி) நவம்பர் 11 ஆம் தேதி அன்று, உணவுக் கடைகளில் பொதுவாகக் காட்சிக்கு வைத்திருக்கும் முட்டை உட்பட அசைவ உணவுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று வாய்மொழி உத்தரவினை வழங்கியது.
இதுகுறித்து பேசிய விஎம்சியின் நிலைக்குழு தலைவர் ஹிதேந்திர படேல், "அனைத்து உணவுக் கடைகளும், குறிப்பாக மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை விற்கும் கடைகள், சுகாதார காரணங்களுக்காக உணவு நன்கு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் முக்கிய சாலைகளில் இருந்து பொதுவாக காட்சிப்படுத்தப்படுவதிலிருந்து அகற்றப்பட வேண்டும். மேலும் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இதுபற்றி பேசிய ராஜ்கோட் மேயர் பிரதீப் டேவ், “பெரும்பாலான மக்கள் இந்த கடைகளை கடந்து செல்லும்போது அதன் வாசனையால் வெறுப்பு உணர்வை அடைகிறார்கள், மேலும் பலர் கோழியை வெளியே தொங்கவிடுகிறார்கள். விற்பனையாளர்கள் 15 நாட்களுக்குள் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.