இரவு 8 மணிக்கு மேல் மது விற்பனைக்கு தடை - முதல்வர் அதிரடி உத்தரவு
மாநிலம் முழுவதும் இரவு 8 மணிக்கு மேல் மது விற்பனைக்கூடாது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
அரசு உயர் அதிகாரிகளுடன் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மது விற்பனை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு ராஜஸ்தான் மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் இரவு 8 மணிக்கு மேல் மது விற்பனைக் கூடாது என அம்மாநில முதலமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசின் இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் உத்தரவை மீறும் விடுதிகள் அல்லது பார்களுக்கு சீல் வைக்கப்படும். மேலும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், 2008 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நிலைப்பாடை மாநில அரசு சோதனை முயற்சியாக எடுத்தது. அதற்கு மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த உத்தரவையும் நாம் சரியாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மது விற்பனையாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பிட்ட விலையைக் காட்டிலும் அதிக விலையில் விற்பது, போலி மதுவை கலந்து விற்பது உள்ளிட்ட பல புகார்கள் அடுக்கப்பட்டன.
இது குறித்து பேசிய முதலமைச்சர், போலியான மது விற்பனை, சட்டத்துக்கு புறம்பான மது விற்பனை குறித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட விலையைவிட அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க்ப்படும் என்று தெரிவித்துள்ளார்.