கால்கள் இல்லை ஆனால் நம்பிக்கை உண்டு - கொரோனா காலத்தில் மனந்தளராத ஆட்டோ ஓட்டுநர்!
புனே நகரைச் சேர்ந்த நாகேஷ் காலேவுக்கு இரண்டும் கால்களும் இல்லை. ஆனால் வற்றாத நம்பிக்கை இருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு நாட்களிலும் அவர் அசராமல் வேலையில் ஈடுபடுவதும் மக்களுக்கு உதவி செய்வதும் பலராலும் பாராட்டப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நேரிட்ட ரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். தன் துயரை நினைத்து குலைந்துபோகாமல் தடுமாறாமல் எழுந்து நின்றார் நாகேஷ் காலே. மனதில் தீராநதியென பெருக்கெடுத்த வலிமையான எண்ணங்களால் கடுமையான காலங்களையும் கடந்து மீண்டும் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்.
“எட்டாம் வகுப்புக்குப் பிறகு குடும்பத்தின் வறுமைச் சூழலால் என்னால் படிக்கமுடியவில்லை. எப்படியோ சில உறவினர்களின் உதவியுடன் ஆட்டோ வாங்கி சம்பாதிக்கத் தொடங்கினேன். எங்கள் தந்தை 2011 இல் மறைந்த பிறகு, நானும் என் சகோதர்களும் தாயைப் பார்த்துக்கொண்டோம்” என்கிறார் காலே. ரயில் விபத்து மனதில் அப்படியே வடுவாய் தேங்கியிருக்கிறது. அப்போது அவர் மும்பையில் இருந்து புனேவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
“ரொம்பவும் கூட்டமாக இருந்து. ரயிலில் வேகத்துடன் பரபரப்பாக இறங்கியவர்கள் என்னை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நான் கீழே விழுந்திருந்தேன். ரயிலிலும் புறப்படத் தொடங்கியிருந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தேன். டாக்டர்கள் செய்யவேண்டியது சிறிய காரியம்தான். என் இரண்டு கால்களையும் துண்டிக்கவேண்டியிருந்தது” என்று கண்கள் பனிக்க விவரிக்கிறார்.
அதுவொரு கடினமான காலம். ஏதோ சொற்பமாக ஆட்டோ மூலம் சம்பாதித்து வந்த இளைஞர், திருமணம் செய்யவும் திட்டம் வைத்திருந்தார். “நான் மிகவும் மனம் உடைந்திருந்தேன். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. என்னை மேம்படுத்த அவர்கள் உதவினார்கள்” என்கிறார்.
நாகேஷின் சகோதரர் அங்குஷ், மென்பொருள் பொறியாளர். தன் சகோதரருக்கு புனேயில் தயாரிக்கப்படும் செயற்கை புராஸ்தட்டிக் கால்களைப் பொறுத்த பலரும் அவரை அணுகினர். நாகேஷ் செயற்கைக் கால்களுடன் எழுந்து நடக்கமுடியும் என்று நம்பிக்கையும் பிறந்தது. மருத்துவரின் ஆலோசனைப்படி, புராஸ்தட்டிக் கால்களை வாங்க 2.5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. முட்டிக்கால்களுக்கு மேலே அவருக்கு கால்களை இழந்துள்ளதால், செயற்கைக் கால்களைப் பொருத்தினால் கூடுதலாக வலிக்கும் என மருத்துவர் தெரிவித்தார்.
இன்று நாகேஷ் காலே, சக்கரங்கள் பொருத்தப்பட்ட மரப்பலகையைப் பயன்படுத்துகிறார். குடும்பத்தினரின் உதவியால் அவருக்கு பழைய இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பியது. ஆட்டோ ஓட்டுவதன் மூலம் வருமானமும் கிடைக்கத் தொடங்கியது.
“என்னால் கால்களின் மூலம் பிரேக் போடமுடியாது என்பது தெரியும். எனவே ஒரு உள்ளூர் மெக்கானிக்கிடம் பேசி 2 ஆயிரம் ரூபாய் செலவில் அதை மாற்றியமைத்தேன். ஹேண்டில்பார் வழியாக பிரேக் போடும் வசதியைப் பெற்றேன்” என்று கூறும் நாகேஷ் காலேவுக்கு நண்பர்களிடம் உதவி கேட்கவும் தயக்கம். ஆனால் அவர்களாக முன்வந்து உதவினார்கள்.
“ஒவ்வொரு நாளும் கொஞ்சம் தூரம் ஆட்டோவில் சென்றுவருவோம். என்னுடன் அமர்ந்துகொண்டு நண்பர் ஒருவர் வருவார். நான் ஆட்டோவில் உட்கார உதவி செய்வார். ஆறு மாதங்களுக்குப் பிறகு நானே தனியாக ஓட்டவும் உட்காரவும் ஆரம்பித்தேன். என் உடலின் மேல்பகுதி மிகவும் வலிமையாக இருப்பதால், தனியாக ஆட்டோவில் உட்கார்ந்துவிடுகிறேன்” என்று விவரிக்கும் நாகேஷ் காலேவுக்கு மற்றவர்களைப்போலவே கொரோனா மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஊரடங்கு நாட்களுக்கு முன்னர், நாகேஷ் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். இன்று ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது. சில நாட்களில் ஒரு ரூபாய்க்குக்கூட வழியில்லை. ஆனாலும் நாகேஷ் மனத்தில் நம்பிக்கைத் துளிர் மட்டும் வாடவில்லை. இதுபோல பல சிரமங்களைப் பார்த்தவன் என்பதால், இந்த நெருக்கடி காலத்தில் இருந்தும் மீண்டுவருவேன் என்று நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.
நம்பிக்கை அலைகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும் கடத்தினார் நாகேஷ். வீட்டில் தனிமையாக இருக்கும் முதியோர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொடுப்பதில் உதவினார். நாகேஷ், கடும் உழைப்பின் மூலம் நெருக்கடியான காலங்களைக் கடக்கிறார். எதிர்காலம் பற்றிய வெளிச்சங்களை மனதில் குறைவில்லாமல் வைத்திருக்கிறார். “என்னுடைய குடும்பத்தின் நல்வாழ்வுக்காக உழைக்கிறேன். ஒருநாள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஓட்டுநர் பள்ளியைத் தொடங்குவேன்” என்று கண்களில் கனவுகள் மிளிரப் பேசுகிறார்.