விவசாயிகளுக்கு முன் எந்த சக்தியும் நிற்க முடியது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்து பிரதிகளை ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து நேரில் வழங்கினர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல்காந்தி, “விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு முன் எந்த சக்தியாலும் நிற்க முடியாது. நாட்டில் அனைத்து தரப்பிலும் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அரசுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வசதி படைத்தவர்கள் அல்ல.
யாரை தீவிரவாதி என அழைக்கிறீர்களோ, அவர்கள்தான் நாட்டிற்கு வளம் சேர்ப்பவர்கள். நாடு ஆபத்தான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஜனநாயகம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மொத்த அரசும் வெறும் மூன்று, நான்கு பேருக்காக மட்டுமே இயங்கி வருகிறது.” என்றார்.
முன்னதாக, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் டெல்லி விஜய் சௌக்கில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் ப்ரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். பேரணியாக சென்ற அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.