இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது- மத்திய உள்துறை
அடுத்த ஆண்டு முதல் இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பக்கூடாது என மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்களில் மாலை 6 மணிக்கு மேலும் பணம் நிரப்பக் கூடாது. நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் 4 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பணத்தை கையாளும் தனியார் நிறுவனங்கள் நாளின் முதல் பாதியில் வங்கிகளிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும், பணத்தை கவச வண்டிகளில்தான் கொண்டுச் செல்லவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன், இரண்டு ஏடிஎம் அலுவலர்களும் இருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Read Also -> "7.24 லட்சம் பேர் முகாமில் தஞ்சம்" : பினராயி விஜயன்
Read Also -> கேரள மண்சரிவில் சிக்கி இறந்த ஒருவரின் உடல் மீட்பு
இதைத்தவிர மேலும் பல பாதுகாப்பு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய உள்துறையின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. பணத்தை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள், ஏடிஎம் மோசடி போன்ற காரணங்களால் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 8000 தனியார் வாகனங்கள் பணத்தை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் வங்கிகளின் சார்பில் தினமும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை கையாள்கின்றனர்.