மாநிலங்களுக்கு தனி ஆதார் சட்டம் : நிதி ஆயோக் ஆலோசனை
மாநில அரசுகளின் இலவச திட்டங்கள் பயனாளிகளுக்கு சரியாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தொடர்புடைய மாநிலங்கள் தனி ஆதார் சட்டத்தை இயற்ற வேண்டும் என நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல மாநிலங்கள் பல்வேறு இலவச பொருட்களையும், சேவைகளையும் தங்களது மக்களுக்கு அளித்து வருகின்றனர். ஆனால் அவை தகுதியான பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய வழிமுறை எதும் இல்லை. இதனால் மாநில அரசுகளின் பணம் வீணாவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. மத்திய அரசின் ஆதார் திட்டத்தின் கீழ் இவற்றை கண்காணிக்க வாய்ப்பில்லை. எனவே இலவச திட்டங்களுக்கும் ஆதாரை கட்டாயமாக்கும் வகையில் மாநிலங்கள் தனிச்சட்டம் இயற்றுவது நல்லது என நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது.