நிதி ஆயோக்கின் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்... தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?
நிதி ஆயோக் வெளியிட்ட முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீட்டில், 17 பெரிய மாநிலங்களில் குஜராத் 56.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத்தின் iNDEXTb Single-Window System, காலவரம்புள்ள அனுமதிகள், நிலையான மின்சாரம் ஆகியவை முதலீட்டு சூழலை மேம்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது.
செய்தியாளர் - M. மீரா
இந்த அறிக்கை எட்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் 84 குறியீடுகளைக் கொண்டு 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை மதிப்பிடுகிறது. நிதி ஆயோக் இதனை வெறும் தரவரிசைப் பட்டியலாக மட்டுமின்றி, ஒரு முன்னேற்றத்திற்கான கருவியாகவும் வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக் அமைப்பு முதன்முறையாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீட்டை (Investment Friendliness Index 2026) வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறந்த சூழலைக் கொண்டுள்ள மாநிலங்களைக் கண்டறிந்துள்ளது.
மொத்தம் 17 முக்கிய பெரிய மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், குஜராத் மாநிலம் 56.6 புள்ளிகளைப் பெற்று நாட்டில்ல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் 53.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு 53.3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
குஜராத் மாநிலத்தின் தொழில்துறை விரிவாக்கப் பணியகம் (iNDEXTb) வழங்கும் Single-Window System அங்கு புதிய தொழில்களைத் தொடங்குவதை மிக எளிமையாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளது.
மேலும், ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சட்டப்பூர்வ அனுமதிகள் மற்றும் தடையின்மைச் சான்றிதழ்கள் (NOC) வழங்கப்படுவதால் திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. வணிகங்களுக்கு ஒரு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய செயல்பாட்டுச் சூழலை வழங்கியுள்ளதாக இந்த நிதி ஆயோக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு குஜராத்தின் மின்சாரத் துறை மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

