நிர்பயா வழக்கு பவன் குமார் கருணை மனு : தள்ளுபடி செய்தார் குடியரசுத் தலைவர்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், பவன்குப்தா தவிர மற்ற மூவரும் தாக்கல் செய்த, கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பவன்குப்தா தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டாலும், நால்வரை தூக்கிலிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. குடியரசுத் தலைவர் தங்களது கருணை மனுக்களை நிராகரித்ததை எதிர்த்து, முகேஷ் குமார் சிங், வினய் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.
ஆனால், அக்ஷய் குமார் இதுவரை உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை. தற்போது பவன் குப்தா மனுவும் நிராகரிக்கபபட்டுள்ள நிலையில், அவரும் உச்ச நீதிமன்றத்தை நாடுவார் எனத் தெரிகிறது. எனவே, அதுவரை நால்வரையும் தூக்கிலிட முடியாத நிலை உள்ளது.