கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல்: 12 வயது சிறுவன் உயிரிழப்பு

 கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல்: 12 வயது சிறுவன் உயிரிழப்பு
 கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல்: 12 வயது சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா இரண்டாம் அலையால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கோழிக்கோடு மாவட்டம் சூலூரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அச்சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பரிதாபமாக உயிரிழந்தார். நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது என்பதால், சிறுவனின் குடும்பத்தினர், நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு இதேபோன்று கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டது. நிபா தாக்குதலுக்கு கேரளாவில் 17 பேர் உயிரிழந்தனர். அதன்பின் மீண்டும் கேரளாவில் 2019-இல் நிபா வைரஸ் ஏற்பட்டது. ஆனால் அப்போது பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பில்லை. 2 முறையும் கேரளாவில் தீவிர கட்டுப்பாட்டிற்குப் பின் நிபா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு மீண்டும் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், கழுத்து வலி, தலைச்சுற்றல், வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு, சுவாசத்தில் பிரச்னை, மனக்குழப்பம், உளறல் போன்றவை கூறப்படுகின்றன. இன்றுவரை நிபா வைரஸுக்கு பிரத்யேக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com