புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கண்டுபிடிப்பு
புல்வாமா தாக்குதலில் உபயோகித்த வாகனத்தின் விவரங்கள் என்.ஐ.ஏ விசாரனையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது.
இந்தத் தாக்குதல் நடந்த அன்றே காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதேபோல், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவும் தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு செய்து ஆதாரங்களை கைப்பற்றினர். அதன்பின்னர் புல்வாமா தாக்குதல் சம்பவம் என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டது. தாக்குதல் நடந்து 5 நாட்களுக்கு பிறகு என்.ஐ.ஏ வசம் விசாரணை வந்தது. இதனையடுத்து, வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ நாடு முழுவதும் தனது விசாரணையை மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், என்.ஐ.ஏ விசாரனையில் புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் விவரங்களை தெரியவந்துள்ளது. அதன்படி புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சஜாட் பாட்(Sajjad Bhat) என்பவருடையது எனத் தெரிகிறது. அத்துடன் சஜாட் பாட் பிப்ரவரி 4ஆம் தேதிதான் இந்த வாகனத்தை வாங்கியுள்ளார். மேலும் அவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்திருந்ததும் என்.ஐ.ஏவின் விசாரனையின் மூலம் வெளிவந்துள்ளது. சஜாட் பட் தற்போது தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.