'இதுபோன்ற ஒரு சூழலை பார்த்ததே இல்லை' - கண்ணீர் ததும்ப வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்!

'இதுபோன்ற ஒரு சூழலை பார்த்ததே இல்லை' - கண்ணீர் ததும்ப வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்!

'இதுபோன்ற ஒரு சூழலை பார்த்ததே இல்லை' - கண்ணீர் ததும்ப வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்!

மும்பையில் நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ட்ருப்தி கிலாடா கண்ணீர் ததும்ப பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

நாட்டிலேயே கொரோனா வைரஸ் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா தான். தினசரி பாதிப்பு 55 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

அதிலும் தலைநகர் மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பது பெரும் திண்டாட்டமாக உள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளில் தொற்று பாதித்த நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பி விட்டன. போதிய அளவுக்குப் படுக்கை வசதி இல்லாமல் இருப்பதால் நோயாளிகளை பல கிலோமீட்டர் தூரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வென்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பிவிட்டன. மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறையும் நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 தனியார் மருத்துவமனைகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் மும்பையில் நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ட்ருப்தி கிலாடா கண்ணீர் ததும்ப பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ட்ருப்தி கிலாடா கூறுகையில், ‘’நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்ததில்லை. மக்கள் பீதியடைந்துள்ளனர். நாங்கள் அதிகமான நோயாளிகளை கவனிக்க வேண்டியுள்ளது. படுக்கைகள் இல்லாததால் மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகள் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள்.

முதலில் நீங்கள் அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ அல்லது கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாலோ நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம் அல்லது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் தவறு செய்கிறீர்கள். பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவ முடியாது.

கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பை தடுக்க உதவும்’’ என்று அந்த வீடியோவில் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com