பெங்களூர் | கையில் ஸ்மார்ட்போன், டிவியில் நெட்ஃபிக்ஸ்.. சிறை கைதிகளின் சொகுசு வாழ்க்கை!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் சட்டவிரோதமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தி, அறையிலேயே டிவியில் நெட்ஃப்ளிக்ஸ் பார்த்த வீடியோக்கள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதி ஒருவர் ஆர்சிபி கிரிக்கெட் போட்டி குறித்து போனில் பேசும் காட்சி உட்பட பல காட்சிகள் வெளியாக, மூன்று சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள கைதிகள் சட்டவிரோதமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதும், சிறை அறையிலேயே டிவியில் நெட்ஃபிளிக்ஸ் பார்ப்பதும் போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிறை அறைக்குள் கைதிகள் மிக இயல்பாக போன்களைப் பயன்படுத்துவதும், பின்னால் இருக்கும் டிவியில் நெட்ஃபிளிக்ஸில் திரைப்படம் ஓடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு கைதி, "நாளை ஆர்சிபி மேட்ச் இருக்கிறது, ஈ சாலா கப் நம்தே" என்று போனில் பேசுவதும் அந்த வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, சிறைத் துறை டிஜிபி அலோக் குமார் உத்தரவின் பேரில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி மூன்று சிறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தங்களுக்குப் போன்களை வழங்கியதே டிஜிபி அலோக் குமார் தான் என்று கைதிகள் வீடியோவில் கூறியிருந்தனர். ஆனால், இது அந்த உயர் அதிகாரியின் பெயரைக் கெடுப்பதற்காக கைதிகள் செய்த சதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்ஷன், அபி மற்றும் ஜைப்சின் டேனியல் ஆகிய மூன்று கைதிகள் இதற்காகத் தனி அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கழிவறை குழாய்கள் மற்றும் பால் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறைப்பகுதியில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் இவ்வளவு வசதிகள் கைதிகளுக்கு எப்படிக் கிடைத்தன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

