தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை மறைத்து திருமணம் - இளைஞரின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு

தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை மறைத்து திருமணம் - இளைஞரின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு
தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை மறைத்து திருமணம் -  இளைஞரின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு

தான் தன்பாலின ஈர்ப்புடையவர் என்பதை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் முன்ஜாமீன் மனுவை மகாராஷ்டிரா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையைச் சேர்ந்த 32 வயது இளைஞருக்கும், 30 வயது பெண்ணுக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமாகி பல நாட்களாகியும் தன் மீது எந்தவித ஆர்வமும் இல்லாமல் கணவர் இருப்பதை கண்டு அந்தப் பெண் வேதனை அடைந்திருக்கிறார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோதும், அவர் சரிவர பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது செல்போனை எடுத்து அந்தப் பெண் சோதனை செய்துள்ளார். அப்போதுதான், தனது கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில ஆண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் பணிபுரிவதாக கூறிய அலுவலகத்திலும் அவர் வேலை செய்யவில்லை என்ற உண்மையையும் அந்தப் பெண் கண்டறிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தன் கணவர் மீது அப்பெண் அண்மையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த தகவல் தெரிந்ததும் அவரது கணவர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அவர் மும்பை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, "தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை மறைத்து அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி இளைஞர் திருமணம் செய்து கொண்டதற்கு முகாந்திரம் இருக்கிறது. எனவே, அவரது முன்ஜாமீன் மனு ரத்து செயயப்படுகிறது" என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com