புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா.. 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைத்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு மத்திய அரசு 75 ரூபாய் நாணயம் வெளியிட முடிவு செய்தது. இந்த நாணயத்தின் ஒருபுறம் அசோக சின்னமும், அதன் கீழே, 'சத்யமேவ ஜெயதே' என்றும், இடதுபுறம், 'பாரத்' என தேவநகரி எழுத்துருவிலும், வலதுபுறம், 'இந்தியா' என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளது. நாணயத்தின் மதிப்பான 75 ரூபாய் என்பது எண்ணில் பொறிக்கப்பட்டு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் நாடாளுமன்ற வளாகத்தின் படம் உள்ளது. இந்த நாணயம் 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவில் உள்ளது. அதன் விளிம்புகளில் 200 சீர்வரிசைகளாக கோடுகளை கொண்டுள்ளது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தில், 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவை இருப்பதாகக் கூறப்படுகிறது.