“தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர்” : ராஜபக்ச மகன் நமல் விமர்சனம்
தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுவதாக ராஜபக்ச மகன் நமல் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்ததுமில்லை. சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.
கோத்தபய ராஜபக்ச இலங்கையின் அதிபராக தேர்வு செய்யப்பட்டபோது பல நாடுகளின் தலைவர்கள், இந்திய பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
சுயநல, சந்தர்ப்பவாத அரசியலை தக்கவைக்க எமது நாட்டின் தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் வைகோ, திருமாவளவன், ராமதாஸ், பழ.நெடுமாறன் ஆகியோர் மக்களிடையே பகையை தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத்தவிர வேறு என்ன செய்திருக்கிறீர்கள். 2009-ல் திருமாவளவன் எம்முடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டார். அவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.
எதிர்கால அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நல்லெண்ணத்துடனும் செயற்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் நிகழ்கால அதிபர் மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.