அசானி புயல் எதிரொலியாக தங்க நிற தேர் ஒன்று கடலில் அடித்துவரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
வங்கக் கடலில் உருவான “அசானி” தீவிர சூறாவளி புயல் புயலாக வலுவிழந்த போதிலும், இன்று காலை ஆந்திர கடற்கரையை நெருங்கியது. இதனால் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு 'ரெட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் ஒன்பது குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சூறாவளியால் ஆந்திர மாநிலம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்தது. புயல் எதிரொலியாக தேர் ஒன்று கடலில் அடித்துவரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. ஸ்ரீகாகுளத்தில் கடல் அலையில் தங்க நிறத்திலான தேர் ஒன்று மிதந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதனை கரைக்கு கொண்டு வந்தனர்.
அசானி புயலால் ஆந்திராவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், கடற்கரை அருகே இருக்கும் கோவிலில் இருந்த தேர் இழுத்துவரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நௌபாடா சப்-இன்ஸ்பெக்டர் “இது எங்கிருந்து சந்தது என தெரியவில்லை. உளவுத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.” என்று கூறினார்.