"லட்சுமி, கணேஷ் வெடியை நீங்கள் விற்கக்கூடாது!" - ம.பி.யில் இஸ்லாமியர் கடைகளில் மிரட்டல்

"லட்சுமி, கணேஷ் வெடியை நீங்கள் விற்கக்கூடாது!" - ம.பி.யில் இஸ்லாமியர் கடைகளில் மிரட்டல்
"லட்சுமி, கணேஷ் வெடியை நீங்கள் விற்கக்கூடாது!" - ம.பி.யில் இஸ்லாமியர் கடைகளில் மிரட்டல்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமிய கடைக்காரர்கள் இந்து தெய்வங்களின் புகைப்படங்கள் போட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என சிலர் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு பலர் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பட்டாசு கடைகளை எடுத்து நடத்தி வருவது வழக்கம். ஜாதி மதம் கடந்து யார் வேண்டுமானாலும் பட்டாசு கடைகளை வைத்து பட்டாசுகளை விற்பனை செய்வர். பட்டாசுகளை பொருத்தவரை யானை வெடி, லட்சுமி வெடி என பல்வேறு வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வரும். அதில் இந்து கடவுள்களின் புகைப்படங்களில் இருப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் இஸ்லாமிய கடைக்காரர்கள் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றனர். அங்கு சென்ற கும்பல் ஒன்று இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் விற்பனை செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

 அதேபோல ஒரு வீடியோவில் இரண்டு ஆண்கள் ஒரு இஸ்லாமிய கடைக்காரருக்கு "இந்த கடையிலிருந்து ஒரு "லட்சுமி வெடி, கணேஷ் வெடியை நீங்கள் விற்கக் கூடாது. விற்கப்பட்டால், நீங்கள் விரும்பாத விஷயங்களைச் செய்ய நாங்கள் கட்டாயப்படுத்தப்படுவோம்" என்று எச்சரிப்பதைக் கேட்கலாம்.

கடையின் உரிமையாளர், அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களால் பயந்து, நீங்கள் சொன்னபடி செய்வேன் என்று பலமுறை உறுதியளிக்கிறார். "தயவுசெய்து கோபப்பட வேண்டாம் ... தயவுசெய்து." என கடை உரிமையாளர் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். 

இதுகுறித்து தேவாஸ் மாவட்ட ஆட்சியர் சந்திரமௌலி சுக்லாவிடம் கேட்டபோது, "விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலீசாரிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தெய்வங்கள் அல்லது தெய்வங்களின் உருவங்களைக் கொண்ட பட்டாசுகளை விற்பனை செய்வது தடைசெய்யப்படும் என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com