இசையமைப்பாளர் பாலபாஸ்கர் குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய அன்று என்ன நடந்தது என அவரின் கார் ஓட்டுநர் அர்ஜூன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் பாலபாஸ்கர் கடந்த மாதம் 25-ம் தேதி தன் மனைவி, மகளுடன் கோயிலுக்குச்சென்று திரும்பும்போது நடந்த கார் விபத்தில் பலத்த காயமடைந்தார். ஒரு வாரமாகத் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அவர், அக்டோபர் 2ம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அந்த விபத்தில் பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினியும் உயிரிழந்தார். இவர்களது மரணம் கேரளாவையே சோகத்தில் ஆழ்த்தியது. பாலபாஸ்கரின் மனைவி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். விபத்து நடந்த போது பாலபாஸ்பகரின் குடும்பம் அல்லாது காரில் இருந்த மற்றொருவர் ஓட்டுநர் அர்ஜூன். இந்நிலையில் விபத்து ஏற்பட்டபோது என்ன நடந்தது என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதில் அன்றைய தினம் என்ன நடந்தது என்று முழுவதும் நினைவில்லை. திருச்சூரில் இருந்து கொல்லம் வரை நான் தான் காரை ஓட்டினேன். கொல்லத்தில் உள்ள ஜூஸ் கடையில் காரை நிறுத்தினோம். நான் சென்று ஜூஸ் வாங்கி வந்தேன். பிறகு பின் சீட்டில் அமர்ந்துவிட்டேன். அதற்கு பிறகு பாலபாஸ்கரே காரை ஓட்டினார். முன் இருக்கையில் அவரது மனைவியும், மகளும் அமர்ந்து இருந்தனர். அதற்கு பிறகு நடந்தது நினைவில்லை என்று தெரிவித்தார். அர்ஜூனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அர்ஜூன் குறிப்பிட்ட ஜூஸ் கடையிலோ அல்லது அதன் அருகிலோ ஏதாவது சிசிடிவி கேமரா இருந்தால் விசாரணைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்