உ.பி.யில் 23 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக் கொலை!
உத்தரப் பிரதேசத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
ஃபரூக்காபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். ஒரு கொலை வழக்கில் சிறை சென்ற பாதம், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று தனது மகளின் பிறந்த நாள் விழா என்று கூறி கிராமத்தினரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்படி மாலையில் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் வீட்டிலேயே சிறைபிடித்தார் பாதம்.
இதையறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்குச் சென்று அவரை சமாதானப்படுத்த முற்பட்டனர். ஆனால், காவல்துறையினரைப் பார்த்த உடனே, அவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார் சுபாஷ் பாதம். இதில் 2 காவலர்களும், கிராமவாசி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
தேசிய பாதுகாப்புப் படையினரும் அங்கு வந்து சேர்ந்த பிறகு, அதிரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே முன்னேறியதில், சுபாஷ் பாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். 8 மணி நேரம் நீண்ட மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததோடு, 23 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், சுபாஷ் பாதம் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். குழந்தைகளை பத்திரமாக மீட்ட காவல்துறைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது உத்தரப்பிரதேச மாநில அரசு.