குடும்பமே சிறையில்: ஆதரவற்ற செல்லப்பிராணியை அரவணைத்த போலீஸ்
கொலைக் குற்றத்தில் குடும்பமே சிறையில் இருக்கும் நிலையில், அவர்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாயை போலீசார் காவல்நிலையத்தில் வைத்து அக்கறையுடன் பாதுகாத்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் மனோகர் அஹிர்வார். இவரும் இவரது இரண்டு மகன்களும் சேர்ந்துக் கொண்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளனர். இதில் 10 வயது சிறுவனும் ஒருவர். நிலத்தகராறில் குடும்பத்தையே கொலை செய்த மனோகர் அஹிர்வார் மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனோகர் அஹிர்வாரின் குடும்பத்தினரை கைது செய்ய அவர்கள் வீட்டிற்கு போலீசார் சென்றபோது அங்கு அவர்கள் வளர்த்து வந்த செல்லப்பிராணியான நாய் (லேப்ராடர்) ஒன்றும் இருந்திருக்கிறது. தனது உரிமையாளரை போலீசார் கைது செய்வதை அறிந்த அந்த நாய் போலீசாரிடம் மூர்க்கத்தனமாக நடந்திருக்கிறது. அப்போதுதான் போலீசாருக்கு ஒரு எண்ணம். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கைது செய்துவிட்டோம். அப்படியானால் வீட்டில் உள்ள நாய்க்கு யார் உணவளிப்பார்கள் என்று. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் நாயை பார்த்துக் கொள்கிறீர்களா என போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், நாயை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாவிட்டால் அது பசியிலேயே செத்துவிடும் என நினைத்த போலீசார், அதனை காவல்நிலையத்திற்கே கொண்டு சென்றனர். தற்போது காவல்நிலையத்தில் இருக்கும் அந்த நாயை போலீசார் தங்களது குழந்தை போல கவனித்துக் கொள்கின்றனர். தங்களது வேலைபோக மீதமிருக்கும் நேரங்களில் நாயை குளிப்பாட்டுவது, உணவூட்டுவது என அந்த நாயை பார்த்துக் கொள்கின்றனர். இதனால் காவல்நிலையத்திலேயே அந்த நாயும் பத்திரமாக வாழ்ந்து வருவதோடு, காவல்துறையினரிடம் நண்பராகவும் இருந்து வருகிறது.

