கடலில் மூழ்கும் இந்திய நகரம்.. 25 வருடங்களிலேயே நடக்கும் கொடூரம்.. தூக்கிவாரி போடவைத்த செய்தி!
செய்தியாளர் - கார்த்திகேயன்
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் கடலில் மூழ்கும் சம்பவங்கள் நடந்திருப்பது வரலாற்றுச் சான்றுகளின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்தியாவில்கூட குஜராத்தின் துவாரகை பகுதி, மேற்கு வங்கத்தின் லோஹாச்சார தீவு, தமிழ்நாட்டில் தனுஷ்கோடி, காவிரிபூம்பட்டினம் போன்ற பகுதிகள் மூழ்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு நகரங்கள் மூழ்குவதற்கு முக்கியமான காரணம் கடல் நீர் மட்டம் உயர்வதுதான். உலகில் அதிகரித்து வரும் வெப்பத்தின காரணமாக, துருவப் பகுதிகளில் உள்ள பனிபாறைகள் உருகி, கடல் நீரின் அளவு அதிகரிக்கிறது. தற்போது உள்ள சூழலில் உலகின் பெரும் பிரச்னையாக மாறியுள்ள இந்தப் புவி வெப்பமயமாதலில், கடலோரப் பகுதிகள் பல, கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கி வருவது கண்டறியப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தற்போது இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான மும்பை, அரபிக்கடலில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரியவந்துள்ளது. அதாவது, கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், மும்பை மாநகருக்கு எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பதை அறிய, மாநகராட்சி சார்பில் புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வு மும்பையின் 149 கி.மீ நீளமுள்ள கடற்கரைப் பகுதி முழுவதும் நடத்தப்படுகிறது. கடல் மட்டம் உயர்வதால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் எவை, கரையோரங்களில் வசிக்கும் ஆபத்தான மக்கள்தொகை எவ்வளவு என்பது இதில் கணக்கிடப்படும்.
உலகளாவிய ஆய்வுகளைப் போலன்றி, இது மும்பை நகரத்துக்கென பிரத்யேகமாக உள்ளூர்க் காரணிகளை ஆராய்கிறது. இந்த ஆய்வறிக்கை 2027-ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஆய்வின் தற்போதைய தகவல்களின்படி, முறையற்ற கட்டமைப்பு மாற்றங்களால், 2050 ஆம் ஆண்டிற்குள் மும்பை நகரத்தின் 80 சதவீதப் பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இயற்கையான அரணாக விளங்கும் சதுப்புநிலங்களையும், வெள்ளச் சமவெளிகளையும் பாதுகாத்து விரிவுபடுத்துவது மட்டுமே கடல்மட்ட உயர்விலிருந்து மும்பையைப் பாதுகாக்க உதவும். அரபிக் கடலில் நீரின் வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், வழக்கத்திற்கு மாறான கனமழையும் கடல் உயர் ஓதங்களும் சேர்ந்து மும்பை மக்களை அடிக்கடி கடும் வெள்ள ஆபத்தில் சிக்க வைக்கின்றன என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

