மும்பையை மீண்டும் வெள்ளக்காடாக மாற்றிய கனமழை - விமான சேவைகள் ரத்து
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த மாத இறுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. அதன்பின்னர் மழையின் தீவிரம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மும்பையில் கனமழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சுமார் 130 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இரவு எட்டு மணி முதல் 11 மணி வரை தொடர்ச்சியாக இடி மின்னலுடன் பெரு மழை கொட்டி தீர்த்தது.
பலத்த மழை காரணமாக மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான குடிசை பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால், மும்பை புறநகர் ரயில்சேவை நிறுத்தப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் மூடப்பட்டது. 34 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.