“காணாமல் போனது கடிதமல்ல; நிர்வாக நேர்மை” - நீட் கடிதம் குறித்து எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்

“குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய நீட் மசோதா கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கடித்தத்தை அனுப்பிவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவிக்கிறது”
சு.வெங்கடேசன் MP
சு.வெங்கடேசன் MPPT

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதிய கடிதம் காணவில்லை என குறிப்பிட்டு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து , நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடந்த 19.01.2023 அன்று நான் கடிதம் எழுதி அனுப்பினேன். அதில் 15 மாதங்களாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவதையும், இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு பெற்றோர் மாணவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தேன்.

letter copy
letter copypt desk

இதற்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. அதில், எனது கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொதுப் பள்ளிக்கான மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ள தகவல் உரிமைச்சட்ட பதில், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அதன்படி ‘24.12.2022 தேதியிட்ட கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து 19.01.2023 அன்று வெங்கடேசன் அளித்த கடிதம் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருப்பது போல, எங்களுக்கு அது வரப் பெறவில்லை’ என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்த நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத் தலைவர் மாளிகை நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல்நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக சொல்கிறது. ஆனால், உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது.

RTI letter copy
RTI letter copypt desk

தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்னையில் ஒன்றிய அரசு சார் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப் போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். காணாமல் போனது கடிதமல்ல, நிர்வாகத்தின் நேர்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர ஆவண செய்யுமாறு வேண்டியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com