மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கட்சியில் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறி மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதாவில் இணைந்தார். முன்னதாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்தநிலையில் வரும் 16ஆம் தேதிக்குள் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என மத்தியப்பிரதேச பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நரேட்டம் மிஸ்ரா ஆளுநரை வலியுறுத்தியுள்ளார். குதிரை பேரத்தை தடுக்க 92 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் 107 பேர் குருகிராமில் உள்ள சொகுசு விடுதிகளிலும் பதவிவிலகிய எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பெங்களூருவில் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ராஜினிமா செய்த 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய பிரதேச சபாநாயகர் என்.பி.பிரஜபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.