அதிகளவு பிடிபட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்: தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளே அதிகளவு கள்ளநோட்டுகளாக பிடிபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. புதிய நோட்டுகளில் பல்வேறு உயர் பாதுகப்பு அம்சங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், 2018ம் ஆண்டை ஒப்பிடும்போது கடந்த 2019ஆம் ஆண்டில் அதிகளவு கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2019ம் ஆண்டில் 25 கோடி 39 லட்சம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 2018ம் ஆண்டில் 17 கோடி 95 லட்சம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, 2019ம் ஆண்டில் எண்ணிக்கையில் 90 ஆயிரத்து 566 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவாக கர்நாடகாவில் 23 ஆயிரத்து 599 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும், குஜராத்தில் 14 ஆயிரத்து 494 ரூபாய் நோட்டுகளும், மேற்குவங்கத்தில் 13 ஆயிரத்து 63 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.