கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தச் சூழலில் வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி, குருக்கு மூலா, பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குரங்கு காய்ச்சலால் மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழக பகுதிக்குள் நோய் பரவாமல் தடுக்க ஏற்கெனவே அடர்ந்த வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு, குரங்கு காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வனத்துறை பணியாளர்களுக்கும் குரங்கு காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஒருவருக்கு குரங்கு காயச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.