"ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம்'' - ராகுல்காந்தி உறுதி
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பணம் அந்தந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நியாய் என்ற பெயரில் ஏழைகளுக்கு மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் தங்களின் திட்டம் கோடிக்கணக்கான பெண்களின் வலிமைக்கும் எழுச்சிக்கும் வழிவகுக்கும் என்றார். மோடி அரசு செயல்படுத்திய பணமதிப்பு நீக்கத் திட்டத்தால் நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து போய்விட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளிலும், மத்திய அரசு பணிகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியும் மத்தியில் ஆளும் பாஜகவும் மறைமுகமாக கைகோர்த்திருப்பதாகவும் ராகுல் காந்தி சாடினார்.