மோடியின் இந்த புதிய இந்துத்வா, தமிழக தேர்தல்களில் பலன் அளிக்குமா..?

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய துறவு பயணம் தமிழர்களின் பாராட்டைப் பெறக்கூடும், ஏனெனில் அவர்கள் இயல்பாகவே மதநம்பிக்கை உடையவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிPTI

கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் உள்ள காவிக் குடும்பம் தங்களின் ஆக்டோபஸ் கரங்களால் தமிழ் மக்களின் மனதினை கைக்கொள்ள பல்வேறு வழிகளை முயற்சித்தது

பாரதிய ஜனதா கட்சி தனது வாக்காளர்களைக் கவர தமிழகத்தில் 'மென்மையான இந்துத்துவா' போக்கை கடைபிடிக்க முயல்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் பயணம் அந்த திசையில் ஒரு நடவடிக்கையாகும்.

ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு மடத்தில் தூங்கிவிட்டு, பிரதமர் தமிழ்நாட்டில் இரண்டு இரவுகள் தங்கியது இந்துத்துவாவின் சாந்தமான முகத்தை முன்வைக்கிறது. ஏனெனில் , இதையெல்லாம் இதற்கு முன்னர் பிரதமர் மோடி செய்தது இல்லை. இந்த ஆன்மீக பயணத்தில் இந்துத்வாவின் மூத்த பயிற்சியாளர் தேசத்தின் நலனுக்காகவும் தனது நலனுக்காகவும் கடவுள்களின் ஆசீர்வாதங்களை பிரார்த்தனை செய்கிறார்.

கண்களைவிட்டு அகலாத தோற்றம்

மோடி இந்த முறை அணிந்திருந்த உடைகளை நம்மால் எளிதில் மறக்க இயலாது. வேட்டி உடுத்தி, மார்பில் ஒற்றைத் துணியைக் கட்டியபடி, ஒரு கோவிலில் இருந்து மற்றொரு கோவிலுக்குச் சென்ற மோடி, புனித நீராடி, பிரசாதம் அல்லது புனித உணவு உண்டு, பூசாரிகளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

ஸ்ரீரங்கத்தில், அவர் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் விஷ்ணு பகவான் மற்றும் ராமர் உட்பட பல்வேறு அவதாரங்களை முக்கிய தெய்வங்களாக கொண்டு வணங்கினார். இதையடுத்து ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்வதற்காக ராமேசுவரம் சென்றார்.

தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி (வில் மற்றும் அம்பு கொண்ட ராமர்) கோவிலில் வழிபாடு நடத்திய அவர், ராமர் சேது கட்டப்பட்ட இடமாகக் கூறப்படும் அரிச்சல்முனைக்குச் சென்றார்.

இராமாயண இணைப்பு

இலங்கையில் வெற்றிகரமான படையெடுப்புக்குப் பிறகு அயோத்திக்குத் திரும்புவதற்கு முன்பு ராமர் பயணம் செய்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படும் இடங்களை அவர் பார்வையிட்டு வழிபட்டதால், இந்த பயணம் ராமாயண தொடர்பைக் கொண்டிருந்தது. மாலை வேளையின் போது மோடி பக்தர்களால் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தின் புனித சுலோகங்களையும் பாடல்களையும் கேட்டார்.

இது அவரது உத்தியோகபூர்வ பயணங்களுடன் முரண்படுகிறது. அங்கு பாஜக தலைவர்கள் அவரது பயணத்தை பாராட்டுவார்கள். அதே சமயம், அவரது அரசியல் எதிரிகள் அதை விமர்சிப்பதால் அரசியல் வெப்பநிலை அதிகரிக்கும். ஊடகங்களின் வெளிச்சத்திற்கு மத்தியில் பிரதமரின் வருகை ஒரு ஆன்மீக பயணமாக கடந்து செல்லப்பட்டதால் வழக்கமான அரசியல் சொல்லாட்சியும் காணப்படவில்லை.

கடந்த கால முயற்சிகள்

கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் உள்ள காவிக் குடும்பம் தங்களின் ஆக்டோபஸ் கரங்களால் தமிழ் மக்களின் மனதினை கைக்கொள்ள பல்வேறு வழிகளை முயற்சித்தது. முதலாவதாக, வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட 'கடுமையான இந்துத்துவத்தை' விரிவுபடுத்த முயன்றது.

ராம ஜென்ம பூமி போராட்டத்தின் போது, ஸ்ரீ ராமர் என்று பொறிக்கப்பட்ட செங்கற்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டது போல தமிழ்நாட்டிலிருந்தும் சேகரிக்கப்பட்டன. ஆனால் அது எந்த உணர்ச்சியையும் தூண்டவில்லை.

முன்னதாக, 1998 பிப்ரவரி 14 அன்று, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவை வருகை தரவிருந்தபோது, கோவை தொடர் குண்டுவெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வட இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அமைதியான மாநிலங்களாகக் கருதப்படும் தமிழகமும் தென்னிந்தியாவும் முதன்முறையாக பயங்கரவாத வரைபடத்தில் இடம் பிடித்தன. கோயம்புத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பெரு வெற்றி பெற்றார்.

கலாச்சார ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது

இருப்பினும், மக்களை மதங்களின் மூலம் பிளவுபடுத்தும் யுக்தி வட இந்தியாவில் செல்லுபடியானது போல, இங்கு செல்லுபடியாகவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் கலாச்சார ரீதியாக மிகவும் ஒருங்கிணைந்தவர்கள். கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து பெண்கள் பிற மதங்களின் கலாச்சார மற்றும் மத அடையாளங்களைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது பொதுவானது. அருகிலுள்ள மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் கலாச்சார நிகழ்வுகளை இந்துக்கள் வழக்கமாகக் கொண்டாடுகிறார்கள்.

தீன் தயாள் உபாத்யாயா முன்வைத்த கலாச்சார தேசியவாதம் குறித்த அத்வானியின் விளக்கம் இந்துத்துவத்தால் பிணைக்கப்பட்ட இந்திய மதங்கள் மற்றும் சமூகங்களின் கலவையாகும்.

மதச்சார்பின்மைவாதிகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மைவாத ஆதிக்கம் இந்த வாதத்தில் உள்ளார்ந்துள்ளது. இதற்கு மாறாக, தமிழ்நாட்டின் மொழியில், மத மற்றும் பிராந்திய சுயாட்சி கலாச்சார தேசியத்தின் அடிப்படையாக அமைகிறது.

கல்வி பரவல்

இங்கிருக்கும் அரசியல் இயக்கங்கள் மாநிலத்தில் கல்வியின் சமமான மற்றும் உள்ளடக்கிய பரவலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இதன் விளைவாக, இந்தியாவில் முஸ்லிம்களிடையே கல்வி சென்றடைந்ததில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

பட்டப்படிப்பை முடித்த முஸ்லிம்களின் சதவீதம் தமிழகத்தில் 36 சதவீதமாகவும், குஜராத்தில் 13 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 16 சதவீதமாகவும் உள்ளது.

இருப்பினும், காவிக்குடும்பம் தமிழ்நாட்டில் தனது ஆதரவு தளத்தை அதிகரிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. மாநிலம் முழுவதும் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலங்களில் அதன் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

முருகன் தமிழகத்தின் முக்கிய தெய்வம் என்பதை உணர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வேல் யாத்திரை மேற்கொண்டார். ஆனால் அது எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

காசி சங்கமம்

மதக் குறியீடுகளின் ஆக்ரோஷமான பயன்பாடு படிப்படியாக இந்துத்துவத்தின் மென்மையான பதிப்புக்கு வழிவகுத்தது. பிரதமரின் 'காசி சங்கமம்' வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான வரலாற்று இணைப்பை முன்னிலைப்படுத்த முயன்றது.

இந்த முயற்சியை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மோடியின் அரசுமுறைப் பயணங்களின் போது அவரது உரைகளில் தமிழ் வார்த்தைகள் மற்றும் இலக்கிய சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதை அவர்கள் வரவேற்றனர்.

பிரதமரின் சமீபத்திய துறவறப் பயணமும் தமிழர்கள் இயல்பாகவே மதப்பற்று கொண்டவர்கள் என்பதால் அவர்களின் பாராட்டைப் பெறக்கூடும். மோடியின் இந்த முயற்சி அவர்களிடம் எதிரொலிக்கிறது, ஏனெனில் இதைத்தான் அவர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக பயிற்சி செய்கிறார்கள்.

அரசியல் தாக்கம்

மென்மையான இந்துத்துவா என்ற பெயரில் தொகுக்கப்பட்ட மோடியின் 11 நாள் சடங்குகளின் ஒரு பகுதியான அவரது கோயில் பயணம் கட்சிக்கு தேர்தல் ரீதியாக பயனளிக்குமா என்றால் பெரிதாக வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பாஜக ஆட்சியில் உள்ள வட மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் மாற்றப்படுவதை அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தியைத் திணிக்க எந்த முயற்சியும் இல்லை என்று மத்திய அரசு அடிக்கடி மறுத்து வந்தாலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்திப் பெயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துவது தமிழக மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு உதவிகளை வழங்குவதில் கஞ்சத்தனமாக இருக்கிறது என்ற கருத்தும் இங்கே நிலவுகிறது.

பிராந்திய பங்காளிகள்

மாநிலத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைந்துள்ளது. அதை எதிர்க்கும் அளவுக்கு பலம் பொருந்திய கூட்டணியை பாஜகவால் கட்டியெழுப்ப முடியவில்லை. அதிமுக மீண்டும் அதன் பழைய பங்காளிகளுடன் பாஜக பக்கம் வரும் என பாஜக இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது

எனவே, கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசுவதை தவிர்க்குமாறு அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அது கேட்டுக் கொண்டுள்ளது.

மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க சில சிறிய பங்காளிகளுடன் தனித்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே வியூகத்தை மாற்றி வாக்காளர்களை கவர தலைமை முயற்சிக்கிறது.

இந்த சுற்றில் திராவிட கட்சிகள், குறிப்பாக திமுக முன்னிலை வகிக்கலாம், ஆனால் காவி இயக்கம் அரசியல் குறித்த தொலைநோக்கு பார்வையை எடுக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com