இந்தியா வரும் ஜப்பான் பிரதமர்: ஜப்பானிய மொழியில் மோடி வரவேற்பு
அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-விற்கு இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில் ஜப்பானிய மொழியில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகரான காந்திநகரில் நடைபெறவுள்ள இந்தியா, ஜப்பான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் பிரதமர் இன்று வருகை தரவுள்ளார். அவரை வரவேற்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, இந்திய-ஜப்பான் உறவுகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக மும்பை அகமதாபாத் இடையேயான புல்லட் ரயிலுக்கான பணிகளை இரண்டு தலைவர்களும் நாளை தொடங்கி வைக்கின்றனர்.
இந்த புல்லட் ரயில் 508 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும் திறன் வாய்ந்ததாகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் ஆகும். ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இத்திட்டம் 2022ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்திற்கு 80 ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் கடனாக வழங்குகிறது. இந்நிலையில் ஜப்பான் பிரதமரை வரவேற்கும் விதமாக அகமதாபாத்தில் மாலையில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கு பிறகு இரண்டு தலைவர்களும் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடவுள்ளனர்.