மேற்கு வங்கம் | ஏப்ரல் 29-ல் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு.. காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில், மேற்கு வங்கத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்தசூழலில் தான், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான, தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக, மேற்கு வங்கத்தில் பிரசித்திப் பெற்ற தந்தானியா காளிபாரி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு நடத்தியுள்ளார். ஏற்கனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபமாக கல்கத்தா காளி ஆலயத்தில் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

