விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!

விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!

டெல்லியில் குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறைக்கு மத்தியில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்வது அல்லது ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு கடுமையாக்கக் கூடும் என்று மத்திய அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்ததாக 'தி பிரின்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

``இப்போது எங்கள் முக்கிய கவனமும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதாகும். உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். வேளாண் சட்டங்கள் தொடர்பான எந்தவொரு கொள்கை முடிவும் மிக விரைவில் எடுக்கப்படும். ஆனால், இப்போதைய சம்பவம் எங்கள் முந்தைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும்" என்று மத்திய அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத மத்திய அமைச்சர் ஒருவர், ``அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு புதிய சலுகைகளை வழங்க வாய்ப்பில்லை" என்று கூறியதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த பாஜக தலைவர், ``இந்தச் சம்பவம் முன்னோடியில்லாதது. போராட்டத்தின் போக்கை மாற்றும். பாஜக தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை அணுகி மூன்று சட்டங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கும். குறிப்பாக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு இடமளிக்கும் விதம் குறித்து விளக்கும்" என்று கூறியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய சட்டங்களை இடைநிறுத்தும் செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் மத்திய அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. எனினும், பேச்சுவார்த்தையில் புதிய வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் வரை நிறுத்திவைக்க மத்திய அரசு முன்மொழிந்தது. ஆனால், உழவர் தொழிற்சங்கங்கள் இந்த வாய்ப்பை நிராகரித்தன. மேலும் சட்டங்களை மொத்தமாக திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று கூறியிருந்தன.

இதற்கிடையே, நேற்று வன்முறையை அடுத்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா உடன் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாலையே ஆலோசனை நடத்தினார். எனினும், பிரதமர் இது தொடர்பாக எந்த கூட்டமும் நடத்தவில்லை. அதேபோல் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால், இன்று அல்லது நாளை, விவசாயிகள் விஷயத்தில் அரசின் எதிர்கால நடவடிக்கை குறித்து பிரதமர் தனது மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை?

பெயர் வெளியிட விரும்பாத மத்திய அமைச்சர் ஒருவர், ``வன்முறையைத் தொடர்ந்து மத்திய அரசு தனது யுக்தியை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை, விவசாயிகளுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களை மட்டும் ஆலோசித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு அமைச்சர், ``மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படமாட்டாது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைகள் அமைதியான விவசாயிகளின் போராட்டத்தின் புனிதத்தன்மையை கிட்டத்தட்ட முடித்துவிட்டன.

விவசாயிகள் போராட்டங்களுக்கு முன், தன்னார்வலர்கள் உதவியுடன் அணிவகுப்பு அமைதியானதாக இருக்கும் என்று ஓர் உறுதிமொழியைக் கொடுத்தனர். ஆனால், எந்தவொரு தன்னார்வலரும் கட்டுக்கடங்காத எதிர்ப்பாளர்களை நிர்வகிப்பதைக் காணவில்லை. நேற்றைய சம்பவம் விவசாயிகளின் எதிர்ப்பு இனி தொழிற்சங்கத் தலைவர்களின் கைகளில் இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.

மூன்று வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க அரசு முன்மொழிந்தபோது, சுமார் 15 விவசாய அமைப்புகள் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக இருந்தன. ஆனால், நேற்றைய போராட்டங்கள் அதற்கான வாய்ப்பை மழுங்கடித்துள்ளன" என்று கூறியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் இது தொடர்பாக கூறும்போது, ``விவசாயிகள் சங்கங்கள் அரசின் நம்பிக்கையை மீறியுள்ளன. கிளர்ச்சிக்கான நிதி வெளியில் இருந்து வருகிறது என்று முதல் நாளிலிருந்து சொல்கிறோம். தன்னார்வலர்கள் போராட்டத்தை நிர்வகிப்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் கூறின. எந்த ஆயுதமும் இருக்காது என்றார்கள். ஆனால், அனைத்து வாக்குறுதிகளும் மீறப்பட்டுள்ளன. விவசாயிகளுடனான அணுகுமுறையில் அரசு மிகவும் இணக்கமாக இருந்தது. சட்டத்தை இடைநிறுத்த அரசு ஒரு வாய்ப்பை வழங்கியது, உச்ச நீதிமன்றமும் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தியது. ஆனால், சில சக்திகள் இப்போது நிறுவப்பட்ட போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘உழவர் இயக்கத்தை இழிவுபடுத்த சதி’!

இதற்கிடையில், உழவர் சங்கத் தலைவர்கள், செவ்வாய்க்கிழமை வன்முறை என்பது விவசாயிகளின் இயக்கத்தை இழிவுபடுத்துவதற்கான திட்டமிட்ட சதி என்று கூறுகின்றனர். ``இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் தொடங்கியதிலிருந்து எந்த வன்முறையும் இல்லை. திடீரென்று, நம்முடைய சொந்த இயக்கத்தை இழிவுபடுத்த நாம் ஏன் இப்படி செய்ய போகிறோம். இதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா கூறியுள்ளார். வன்முறைக்குப் பின்னால் ஏதேனும் வெளிப்புற கூறுகள் இருக்கிறதா என்று விவாதிக்க சன்யுக்தா கிசான் மோர்கா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தப்போவதாக மொல்லா மேலும் கூறியிருக்கிறார்.

டெல்லி காவல்துறை நேற்று ஒப்புதல் அளித்த பாதையில் இருந்து எதிர்ப்பாளர்கள் விலகியதை அடுத்து, டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகருக்குள் நுழைந்து மத்திய டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ மற்றும் செங்கோட்டையை அடைந்து முற்றுகையிட்டனர். லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Print

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com