பிரதமரின் நம்பிக்கையை காப்பாற்ற உழைப்பேன்: நிர்மலா சீதாராமன்
பிரதமர் நரேந்திர மோடி தன்மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நாள், கட்சித் தலைமையும், பிரதமரும் நம்பிக்கை அதிகம் வைத்து மிகப்பெரிய பொறுப்பை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் பொருட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். அதற்காக கடுமையாக உழைப்பேன்” என்று கூறினார்.
இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி நிர்மலா சீதாராமன் தான். மேலும், 5 மூத்த அமைச்சர்கள் அடங்கிய பாதுகாப்புக்கான கேபினட் குழுவில் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார். அதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி இடம்பெற்றுள்ளனர்.
நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் உடன் தர்மேந்திர பிரதான் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது.