பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு.. இந்தியாவுக்கு உதவும் அமீரகம்! அதிரடி 3 PLAN!
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான போர் நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவுடனான தனது உறவை அமீரகம் மேலும் பலப்படுத்தியுள்ளது. அபுதாபியில் பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், மூன்று முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்களில் மிக முக்கியமானது, இந்தியாவின் முக்கியமான பெட்ரோலிய சேமிப்புத் திட்டம் சார்ந்தது. இந்திய பெட்ரோலிய இருப்பு நிறுவனம் மற்றும் அமீரகத்தின் அட்னாக் (ADNOC) நிறுவனம் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளில் அமீரகத்தின் கச்சா எண்ணெய் இருப்பு 30 மில்லியன் பேரல்களாக உயர்த்தப்படவுள்ளது.
இதன் மூலம், சர்வதேச சந்தையில் போர் காரணமாக விநியோகத் தடை ஏற்பட்டாலும், இந்தியாவில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய்யை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அட்னாக் இடையே நீண்ட கால அடிப்படையில் சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும், அமீரகம் தனது ஹப்ஷான்-புஜைரா (ADCOP - Habshan-Fujairah Pipeline) குழாய் வழித்தடம் மூலம் ஓமன் வளைகுடா வழியாக இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை, இரு நாடுகளும் இணைந்து நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவது, உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் சைபர் பாதுகாப்பில் இணைந்து செயல்படுவது என ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளன. மேலும், குஜராத்தின் வதினார் (Vadinar) பகுதியில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை மேம்படுத்தவும், வங்கி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும் அமீரகம் முன்வந்துள்ளது.
அமீரகம் தற்போது ஓபெக் (OPEC) அமைப்பில் இருந்து வெளியேறியுள்ளதால், இந்தியாவுக்குத் தேவையான கூடுதல் கச்சா எண்ணெய்யை தடையின்றி வழங்குவதில் அந்த நாட்டுக்கு இப்போது அதிக சுதந்திரம் கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், உலகளாவிய நெருக்கடி காலங்களிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடையின்றித் தொடரச் செய்யும் ஒரு பாதுகாப்பு அரணாகப் பார்க்கப்படுகிறது.

