\
பசு பாதுகாவலர்களை அடித்து நொறுக்கிய லாரி ஓட்டுநரின் நண்பர்கள்

பசு பாதுகாவலர்களை அடித்து நொறுக்கிய லாரி ஓட்டுநரின் நண்பர்கள்

பசு பாதுகாவலர்களை அடித்து நொறுக்கிய லாரி ஓட்டுநரின் நண்பர்கள்
Published on

மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கும்பலாக தாக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மஹாராஷ்டிராவின் தாவுந் - அகமத்நகர் சாலையில் பசுக்களை ஏற்றிச்சென்ற ஒரு வாகனத்தை சிவசங்கர் ராஜேந்திர சுவாமி என்பவர் தலைமையிலான 9 பேர் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் இரண்டு பசு மற்றும் பத்து காளைகள் இருந்துள்ளன. எனவே சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிவந்ததாகக் கூறி வாகன உரிமையாளர் வாஹிப் ஷெய்க் மற்றும் ஓட்டுநர் ராஜூ ஷெய்க் ஆகியோரைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வாகன உரிமையாளர் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆயுதங்களுடன் காவல்நிலையம் வந்த வாஹிப்பின் நண்பர்கள், காவல்நிலையத்திற்கு அருகில் பசுபாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் அந்த கும்பலை கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக சிவசங்கர் ராஜேந்திர சுவாமியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் புகார் அளித்துள்ளதாகவும், புகார் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், காவல் துணை கண்காணிப்பாளர் சுதர்சன் முண்டே கூறினார். புனே மற்றும் அகமத்நகர் மாவட்டங்களில் பசு பாதுகாப்பு தொடர்பாக ராஜேந்திர சுவாமி தரப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com