“தகுதியற்ற அரசு ஊழியர்கள் தேவையில்லை” - வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கும் மிசோரம் அரசு!
கடந்த ஆண்டு இறுதியில் மிசோரம் மாநிலத்திற்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்துஹோமா அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். இந்த நிலையில், மிசோரம் மாநில கல்வித் துறையின் முன்முயற்சிகள் தொடர்பாக ஐசால் நகரில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் லால்துஹோமா, “அரசுத் துறைகளில் தகுதியற்ற அனைத்து ஊழியர்களையும் விடுவிப்பது நல்லது என்று கருதுகிறோம். அவர்கள் இனி அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள். உரிய விதிமுறைகளின்படி அவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது. சிறப்பாக வேலை செய்யும் திறமையான ஊழியர்களை பணியமர்த்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
தகுதிவாய்ந்த மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில அரசு ஊழியர்களின் பணிக்காலம் மற்றும் அவர்களின் சேவைகளை மறுபரிசீலனை செய்ய அந்தந்த துறைகளில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து திட்டங்களும் முறையாகவும் திறம்படவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.